பெருகி வரும் உடல்நலக் குறைபாடுகளும் அருகி வரும் ஆரோக்கியமும் சொல்கிற செய்தி ஒன்றுதான். நம் வாழ்க்கை முறையிலும் உணவுப் பழக்கத்திலும் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்தியே ஆக வேண்டும் என்பதுதான் அது.
நம் பாரம்பரிய உணவுப் பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்வது ஒன்றே ஆரோக்கிய வாழ்க்கைக்கு அடிப்படை. அந்த வகையில் சிறுதானிய வகைகளுக்குத்தான் நாம் முதலிடம் தர வேண்டும் என்று சொல்கிறார் திருநெல்வேலியைச் சேர்ந்த சுபாஷினி வெங்கடேஷ்.
சத்து நிறைந்த தானியங்களைச் சுவையுடன் சமைக்க உதவுகிறார் அவர். தங்கள் பகுதியில் நடந்த சிறு தானிய உணவுப் போட்டியில் முதல் பரிசு பெற்ற சுபாஷினி, தான் சமைத்த சில உணவு வகைகளை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.
என்னென்ன தேவை?
சாமை அரிசி - 3 கப்
வெங்காயம், தக்காளி - 2
குடமிளகாய் -1
முட்டை கோஸ் - சிறிதளவு
பச்சை மிளகாய் - 3
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா பொடி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
சாமை அரிசியை மூன்று மணி நேரம் ஊறவைத்து நன்கு அரைக்கவும். அரைக்கும்போது சிறிதளவு உப்பு போடவும். வாணலியை அடுப்பில் வைத்து மாவை ஊற்றவும். 1 கரண்டி எண்ணெய் சேர்த்துக் கிண்டவும். மாவு நிறம் மாறிக் கையில் ஒட்டாமல் பந்துபோல வரும்போது இறக்கவும். அதைச் சிறு உருண்டைகளாகப் பிடித்து ஆவியில் வேகவைத்து சூடாக இருக்கும்போதே இடியாப்ப அச்சில் போட்டுப் பிழிந்து வைக்கவும்.
வாணலியை அடுப்பில் வைத்துச் சிறிதளவு எண்ணெய் விடவும். காய்ந்தவுடன் மெலிதாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, குடமிளகாய், முட்டைகோஸ், பச்சை மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும். சிறிது கரம் மசாலா பொடி தூவவும். பிழிந்து வைத்திருக்கும் சாமையைப் போட்டுப் பிரட்டவும். கொத்தமல்லி தூவிப் பரிமாறவும். சாஸ் தொட்டுக்கொண்டு சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
Leave A Comment